ராகுல் காந்தியை சமாதானம் செய்ய பிரியங்கா காந்தி தீவிர முயற்சி


ராகுல் காந்தியை சமாதானம் செய்ய பிரியங்கா காந்தி தீவிர முயற்சி
x
தினத்தந்தி 28 May 2019 8:00 AM GMT (Updated: 28 May 2019 8:00 AM GMT)

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் பிரியங்கா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனை கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த தகவலும் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதற்கிடையே சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகர், ஜார்கண்ட் அஜய்குமார், அசாம் ரிபுன் போரா, ராஜஸ்தான் அசோக் கெலாட், உத்தரபிரதேசம் ராஜ்பாப்பர், மராட்டியம் அசோக் சவாண் ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் ராகுல் காந்தி  தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  பிரியங்கா காந்தி இன்று ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது ராஜினாமா முடிவை கைவிடுமாறும் அதேசமயம் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் சச்சின் பைலட், ரண்தீப் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் காந்தியை சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் ராகுல் காந்தி  வீட்டுக்கு வந்தார். கடந்த சில தினங்களாக அவரை சந்திக்க ராகுல் காந்தி மறுத்து வந்தநிலையில் இன்று சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இன்று மாலை 4.30 மணிக்கு ராகுல் காந்தி சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Next Story