2-வது முறையாக பிரதமர் ஆகிறார்: மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு - ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தயார்


2-வது முறையாக பிரதமர் ஆகிறார்: மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு - ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தயார்
x
தினத்தந்தி 30 May 2019 12:15 AM GMT (Updated: 29 May 2019 11:15 PM GMT)

மோடி 2-வது முறையாக பிரதமர் ஆகிறார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், அவரது தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கிறது.

புதுடெல்லி,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.

நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்து உள்ளார். இன்று பதவி ஏற்கிறார்

அதை ஏற்று மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக் கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆகிறார்.

பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

மோடியுடன் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.

ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் மீண்டும் மந்திரி ஆகிறார்கள்.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அழைப்பை ஏற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

ஆந்திர முதல்-மந்திரியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற பின்னர் அவர் டெல்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கு கொள்கிறார்.

மோடியின் அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளான வங்காளதேசத்தின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மேற்கு வங்காளத்தில் அரசியல் கலவரத்தில் பலியான 50 பாரதீய ஜனதா தொண்டர்களின் குடும்பத்தினருக்கும் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும்.

ஆனால் இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 8,000 பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் இடவசதியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும்.

பதவி ஏற்பு விழா 1½ மணி நேரம் நடைபெறும் விழா முடிந்ததும், அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார்.

இதற்கிடையே, யார்-யாரை மந்திரிகளாக நியமிக்கலாம்? என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை மந்திரி பதவிகள் வழங்கலாம்? என்பது குறித்தும் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் மோடி நேற்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

இதேபோல் பீகார் முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரும் நேற்று அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், தங்கள் கட்சிக்கு 2 மந்திரி பதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி, மோடி அரசில் மீண்டும் அதே இலாகாவுக்கு மந்திரியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.


Next Story