சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்: மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை


சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்:  மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
x
தினத்தந்தி 3 Jun 2019 2:42 AM GMT (Updated: 3 Jun 2019 2:42 AM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

புதுடெல்லி,

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது. இந்த மனு 3-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த திட்டத்தால், சேர்வராயன், கல்வராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல், சென்னை- மதுரை பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அந்த திட்டத்துக்குரிய நிதியை கொண்டு சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அதை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பினால் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளது. இதனால் மத்திய அரசின் வேறு சில திட்டங்களும் பாதிப்பு அடைந்து உள்ளன. பொதுநலன் கருதி அரசாங்கம் செயல்படுத்த முன்வரும் திட்டங்களுக்கு தடை விதிப்பது அப்பகுதி மக்களின் நலனுக்கு எதிரானது.

எனவே ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து, ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை இன்று (ஜூன்3) உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால், தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று கடந்த ஏப்ரல் மாதம் அன்புமணி ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story