நிபா வைரஸ்: விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் அரசு உத்தரவு


நிபா வைரஸ்:  விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு  ராஜஸ்தான் அரசு உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2019 3:01 PM GMT (Updated: 6 Jun 2019 3:01 PM GMT)

நிபா வைரஸ் தொற்று கேரளாவில் 23-வயது இளைஞருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்படுகின்றனர்.

ஜெய்பூர்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த நோய்க்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதற்கு முன்பு 17 பேர் பலியானார்கள். இதில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த நர்சு லினி என்பவரும் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவில் மீண்டும் பரவி வருகிறது.

இதனால் கேரள எல்லையையொட்டிய தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. இதற்காக எல்லைப் பகுதிகளில் முகாம்கள் அமைத்து மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தின் உள்ளே வரும் வாகனங்கள் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்திலும்  தீவிர கண்காணிப்பு  நடைபெற்று வருகிறது. கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களில்  உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் அவசர சிகிச்சைப் பிரிவுகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், நிபா வைரசை கட்டுப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருந்து செயலாற்ற வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு ஷர்மா உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தானில் வசிக்கும் கேரள மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும் என்றும் மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story