ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: துபாய் தொழிலதிபர் வெளிநாடு செல்ல தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: துபாய் தொழிலதிபர் வெளிநாடு செல்ல தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2019 9:45 PM GMT (Updated: 7 Jun 2019 9:15 PM GMT)

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், துபாய் தொழிலதிபர் வெளிநாடு செல்ல தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ‘அகஸ்டாவெஸ்ட்லேண்ட்’ ஹெலிகாப்டர்கள் வாங்கும் பேரத்தில் ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு தொடர்ந்துள்ளன. பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா, இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அவர் ‘அப்ரூவர்’ ஆக மாறிவிட்டார்.

இதற்கிடையே, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஐரோப்பா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்ல அவர் டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 1-ந் தேதி, அதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

அதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனு, நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. வெளிநாடு செல்ல ராஜீவ் சக்சேனாவுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 10-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சக்சேனாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

Next Story