பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது - தேர்தல் ஆணையம்


பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 10 Jun 2019 3:30 PM GMT (Updated: 10 Jun 2019 3:30 PM GMT)

பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


புதுடெல்லி,  


2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எதிர்க்கட்சிகள் புகார்கள் கொடுத்த போது அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. சில புகார்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய இந்த நற்சான்றிதழ் நடவடிக்கைக்கு தேர்தல் கமி‌ஷனர் லவாசாவே எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில்  பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

பிரதமர் மோடி உள்ளிட்டோரின் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் தேர்தல் ஆணையர் லவாசாவின் எதிர்ப்பு கருத்துகளையும் வழங்குமாறு அவர் கேட்டிருந்தார்.

ஆனால் இந்த விவரங்களை வழங்க தேர்தல் கமி‌ஷன் மறுத்துள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்கள் அனைத்தும் அந்தந்த பிராந்திய பிரிவுகளால் கையாளப்பட்டன. இதில் நீங்கள் (பத்திரிகையாளர்) கேட்டுள்ள விவரங்கள் தொகுப்பு வடிவில் இல்லை. இத்தகைய தொகுப்புகள் ஆதாரங்களை அழித்து விடும் எனக் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story