புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது


புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 11 Jun 2019 7:02 AM GMT (Updated: 11 Jun 2019 7:02 AM GMT)

புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் (வயது 78) உடல் நல குறைவால் நேற்று காலமானார்.  புதுச்சேரியின் வில்லியனூர் நகரில் பிறந்த அவர், தி.மு.க.வில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்துள்ளார்.  கடந்த 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி பெற்ற அவர் 5 முறை இதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.  அவரது உடலுக்கு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.  அவரது மறைவையொட்டி புதுச்சேரியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்தது.  இதையொட்டி தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

அவரது மறைவுக்கு ஆளுநர் கிரண்பெடி மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  ஜானகிராமனின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான மரக்காணத்தை அடுத்த ஆலத்தூருக்கு எடுத்து செல்லப்பட்டது.  அங்கு அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்திய பின் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story