வாயு புயல்: முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை


வாயு புயல்: முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 11 Jun 2019 5:24 PM GMT (Updated: 11 Jun 2019 5:24 PM GMT)

வாயு புயலை எதிர்கொள்ள செய்யும் முன்னேற்பாடுகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை 8-ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.  இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது. இது தீவிர புயலாக மாறி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகருகிறது. குஜராத் மாநிலம் விராவல் பகுதி அருகே புயல் வியாழக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் வரும் 13-ம் தேதி அதிகாலை குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135  கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் மற்றும் அதன் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உள்துறை மந்திரி  அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அப்புறப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்றும், முப்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை தயார் நிலையில் இருக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வான்வெளி கண்காணிப்பை ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலம் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளபட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story