ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம்


ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம்
x
தினத்தந்தி 12 Jun 2019 12:30 PM GMT (Updated: 12 Jun 2019 12:30 PM GMT)

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த மாதம் 30-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார். அன்றைய தினம் வேறு மந்திரிகள் பதவியேற்காத நிலையில், நேற்று 25 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

மாநிலத்தில் சமூக சமத்துவ மந்திரிசபை அமைக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப தனது மந்திரி சபையில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்து உள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவருக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்கவில்லை. இது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்  ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டநிலையில், ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் தலைவராக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

துணை முதல்வர் பதவி கிடைக்காததால் ரோஜா அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், ஆந்திர அரசின் முக்கிய துறையில் அவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story