‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கிறது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்


‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கிறது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
x
தினத்தந்தி 12 Jun 2019 3:18 PM GMT (Updated: 12 Jun 2019 10:08 PM GMT)

குஜராத் மாநிலத்தில் ‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது. அப்போது 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் பாதிக்கும் 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 400 கிராமங்களை சேர்ந்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முப்படைகளும், கடலோர காவல்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெராவல், ஓஹா, போர்பந்தர், பாவ்நகர், புஜ், காந்திதாம் ஆகிய இடங்களில்  ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.  புயல் நிலைமையை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் உதவிக்கு தயாராக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வெராவல் மற்றும் துவராகாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் காற்றுடன் மழை பெய்துள்ளது.

Next Story