தாயாரின் மறுமணம் : வாழ்த்து கூறிய மகனுக்கு குவியும் பாராட்டு


தாயாரின் மறுமணம் : வாழ்த்து கூறிய  மகனுக்கு குவியும் பாராட்டு
x
தினத்தந்தி 13 Jun 2019 7:51 AM GMT (Updated: 13 Jun 2019 7:51 AM GMT)

தாயாரின் மறுமணம் குறித்து, அவரது மகன் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு, பலரின் வாழ்த்துக்களையும் குவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதி கோட்டயம் நகரைச் சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர், இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்திய மாணவர் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்து வருகிறார். ‘எனது தாயின் மறுமணம்' என்ற தலைப்பில் நேற்று அவரின் பேஸ்புக் பக்கத்தில் தனது தாயாரின் மறுமணம் குறித்துப் பதிவு செய்திருக்கிறார். தனது தாயின்  மறுமணத்திற்காகத் தான் வருந்தவில்லை, உண்மையில் சந்தோசப்படுவதாக அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

தனது தாயாரின் புகைப்படம் மற்றும் அவரின் புதிய தந்தை புகைப்படம் என இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு, அதன் கீழ் சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்புணர்வுடன் யாரும் இந்த பதிவைப் படிக்க வேண்டாம் என்றும், அப்படியே நீங்கள் வெறுப்புடன் பார்த்தாலும் அது எங்களை எந்த வகையிலும் இழிவுபடுத்தாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீதர் பதிவில் கூறியிருந்தது "தனக்காகத் தனது வாழ்க்கை முழுவதுமாக அர்ப்பணித்தவர் எனது தாய், அவரது வாழ்வில் பல துயரங்களை அனுபவித்தவர். ஒரு முறை என் தந்தை என் தாயைப் பலமாகத் தாக்கிவிட்டார், என் தாயின் தலையிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அப்பொழுது என் தாயிடம் நான் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் இன்னும் என் நினைவில் நிலைத்திருக்கிறது".

என் தாயிடம் "ஏன் இன்னும் இந்த உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். நான் உனக்காக மட்டுமே வாழ்கிறேன், அதற்காக இந்த கஷ்டங்களை எல்லாம் நான் பொறுத்துக்கொள்வேன்" என்று அவரின் தாய் பதில் அளித்ததாக ஸ்ரீதர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தாயின் பதிலைக் கேட்ட ஸ்ரீதர் மறுகணமே, தனது தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே தனியாக வந்துவிட்டார். அந்த தருணத்திலிருந்து இப்படி ஒரு நல்ல செய்தியை எண்ணித்தான் அவர் காத்திருந்ததாகவும் அவரின் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனக்காகத் தனது இளமைப் பருவத்தைத் தியாகம் செய்தவர் என் அம்மா. என் தாய்க்குத் திருமண வாழ்த்து, அவர் மேன்மேலும் பல உயரங்களுக்கு செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக என் தாயின் மறுமணத்தை யாரிடமும் மறைக்க விரும்பவில்லை. இதில் எனக்கு எந்த இழிவுமில்லை என்று அவர் பதிவில் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

தாயின் மறுமணம் குறித்து பதிவிட்டுள்ள இந்த நெஞ்சார்ந்த பதிவை வாசித்து, உணர்ச்சிவசப்படவைத்து அனைவரின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீதர். தற்பொழுது வரை இந்த பதிவை சுமார் 40,000 நபர்கள் லைக் செய்தும் 4000 நபர்கள் ஷேர் செய்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் தற்பொழுது இந்த பதிவு வைரல் ஆகிவருகிறது.

Next Story