அருணாசல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, 13 பேர் சடலம் மீட்பு


அருணாசல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, 13 பேர் சடலம் மீட்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 11:06 AM GMT (Updated: 13 Jun 2019 11:06 AM GMT)

அருணாசல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியும், 13 பேர் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்கட் விமானப்படை தளத்தில் இருந்து அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு புறப்பட்டது. விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் என 13 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் கிளம்பிய ½ மணி நேரத்தில், அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. 

இதைத்தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணிகளில் விமானப்படை முழுவீச்சில் இறங்கியது. விமானப்படையின் பல்வேறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை உளவு விமானங்கள் இணைந்து அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. மேலும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த பணிகளுக்கு உதவியது.

இந்த நீண்ட தேடுதல் வேட்டையின் பலனாக, மாயமான விமானத்தின் பாகங்கள் சியாங் மாவட்டத்தின் லிபோ கிராமத்துக்கு வடக்கே சுமார் 16 கி.மீ. தொலைவில் சிதறிக்கிடப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஒன்று அந்த பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அதில் இருந்து வீரர்கள் இந்த பாகங்களை கண்டுபிடித்தனர். விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் இருந்தவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.

விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று மீட்புக்குழு ஒன்று விரைந்தது. விமானப்படை, ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் சில மலையேற்ற வீரர்கள் அடங்கிய இந்த குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் விபத்து நேரிட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது 13 பேரும் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. விமானத்தின் கருப்பு பெட்டியும், அதிலிருந்த 13 பேரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது. சடலங்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story