அடுத்த 100 நாட்களில் 1 கோடி விவசாயிகளுக்கு கடன் அட்டை : மத்திய அரசு திட்டம்


அடுத்த 100 நாட்களில் 1 கோடி விவசாயிகளுக்கு கடன் அட்டை : மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:59 PM GMT (Updated: 13 Jun 2019 10:59 PM GMT)

மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வேளாண் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

புதுடெல்லி, 

விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளர்களை சேர்க்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்துக்கான தொகையை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த முடியும் என அறிவுறுத்தினார்.

இதைப்போல விவசாயிகளிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள கிசான் கடன் அட்டையை மேலும் ஏராளமான விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி அடுத்த 100 நாட்களில் 1 கோடி விவசாயிகளுக்கு இந்த கடன் அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக கிராமங்கள் தோறும் பிரசாரம் மேற்கொண்டு விவசாயிகளிடம் இந்த அட்டை குறித்த பயன்பாடுகளை எடுத்துரைக்குமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மந்திரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story