மோசமான வானிலையால் விமான விபத்தில் பலியான வீரர்களின் உடலை மீட்பதில் சிக்கல்


மோசமான வானிலையால் விமான விபத்தில் பலியான வீரர்களின் உடலை மீட்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 17 Jun 2019 3:50 AM GMT (Updated: 17 Jun 2019 3:50 AM GMT)

மோசமான வானிலையால் விமான விபத்தில் பலியான வீரர்களின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி,

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 விமானம், அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹாட்டில் இருந்து அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஷியோமி மாவட்டத்துக்குக் கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. பயணத்தைத் தொடங்கிய அரை மணி நேரத்தில், அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் விமானப் படையினர் ஈடுபட்டு வந்தனர். விமானம் மாயமான பகுதி, மலைகள் அதிகமுள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதால் விமானத்தைத் தேடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தின் லிபோ என்ற இடத்துக்கு வடக்கில் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில், மாயமான ஏஎன்-32 விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டன.

ஆனால், விமானத்தில் பயணம் மேற்கொண்ட 13 பேரும் உயிரிழந்து விட்டதாக விமானப் படை வியாழக்கிழமை அறிவித்தது. விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் இறந்தவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.  இதையடுத்து, உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  எனினும் மோசமான வானிலை காரணமாக , உடலை மீட்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக உடல்கள் மீட்கப்பட்டு அசாமில் உள்ள ஜோர்ஹட் கொண்டு வரப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது. முடிந்தவரை விரைவாக உடல்கள் மீட்கப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

Next Story