மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு
மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் புதிய அரசை அமைத்து உள்ளது.
புதிய அரசு கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்ற நிலையில், நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டம் கூடியது. இதில், இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் பொறுப்புக்கு மேனகா காந்தி தேர்வு செய்யப்படலாம் என்று பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், சபாநாயகர் பொறுப்புக்கு ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஓம் பிர்லாவை சபாநாயகர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதை அவரது மனைவி அமிதா பிர்லாவும் உறுதி செய்துள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அமிதா பிர்லா, “எங்களுக்கெல்லாம் இது மிகவும் பெருமை மிக்க தருணமாகும். அவரை (ஓம் பிர்லா) தேர்வு செய்தமைக்காக கேபினட்டிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். எனினும், ஓம் பிர்லாவிடம் இது பற்றி கேட்டபோது, ”தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது” என மழுப்பிவிட்டார். எம்.பி. ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக நியமிக்க எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story