ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி


ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 19 Jun 2019 5:17 AM GMT (Updated: 19 Jun 2019 7:45 AM GMT)

ஆந்திர போலீசாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் ஆந்திர போலீசாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டுமென்ற திட்டமும். 

இது குறித்து பேட்டியளித்த அம்மாநில டிஜிபி, காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டியின் மூலம் மொத்தம் 19 மாடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப சில நாட்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்தார்.

* முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றவுடன் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக அதிகப்படுத்தி கையெழுத்திட்டார். 

* விவசாயிகளுக்கு ஆதரவாக போலாவரம் திட்டத்தை விரைவுப்படுத்துவது மட்டுமல்லாமல் மற்றொரு புதிய திட்டத்தையும் அறிவித்தார்.

* ரையத் பரோசா என்ற திட்டத்தின்படி அனைத்து விவசாயிகளும் ஆண்டிற்கு 12,500 ரூபாய் சலுகையை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் மற்றும் 25 கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் செயல்படுவார்கள். அத்துடன் இவர்களது பதவிக்காலம் 30 மாதங்களாக இருக்கும் என்ற அதிரடி முடிவை அறிவித்தார். 

* ஆந்திராவில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என்ற முடிவை அறிவித்துள்ளார். 

* மாநில போக்குவரத்து கழகத்தை அரசே நடத்தும் என்ற முடிவையும் தெரிவித்துள்ளார். 

*  ஆந்திராவில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான மதுபான கடைகள் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். 

* ஆந்திராவில் மண் அள்ளுவதற்கு 15 நாட்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தடை விதித்துள்ளார்.

Next Story