மூளைக்காய்ச்சல் பலி: மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


மூளைக்காய்ச்சல் பலி: மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 24 Jun 2019 7:13 AM GMT (Updated: 24 Jun 2019 7:13 AM GMT)

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 130-ஐ கடந்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என இருவகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது. 

இதைத் தொடர்ந்து மத்திய மருத்துவ நிபுணர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றைய நிலவரப்படி முசாபர்பூர் பகுதியில் மூளை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தை முன்வைத்து வழக்கறிஞர்கள் மனோகர் பிரதாம் மற்றும் சன்பிரீத் சிங் அஜ்மனி ஆகியோர் சுப்ரீம் கோட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

மூளை காய்ச்சல் நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாக இன்னும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story