மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் - சமாஜ்வாடி


மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் - சமாஜ்வாடி
x
தினத்தந்தி 24 Jun 2019 2:48 PM GMT (Updated: 24 Jun 2019 2:48 PM GMT)

சமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்ற மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் என சமாஜ்வாடி தெரிவித்துள்ளது.



உத்தரபிரதேசத்தில் இரு துருவங்களாக இருந்த கட்சிகள்அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை தோற்கடிப்பதற்காக ஒன்றாக இணைந்தன. ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த கூட்டணியையும் மீறி பா.ஜனதா அமோக வெற்றியை அங்கு பதிவு செய்தது. தேர்தல் தோல்விக்கு பிறகு இரு கட்சியினருமே ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், சமாஜ்வாடியின் வாங்கு வங்கி நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றும், எனவே உத்தரபிரதேச சட்டசபையில் காலியாக இருக்கும் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்றும் சமீபத்தில் மாயாவதி அறிவித்தார்.

இந்நிலையில் தேர்தலுக்கு பின் சமாஜ்வாடி நடந்து கொள்ளும் விதம் காரணமாகவும், அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பாரதீய ஜனதாவை தோற்கடிக்க முடியாது என்பதாலும், எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவது என்று பகுஜன் சமாஜ் முடிவு செய்து உள்ளது. கட்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இனி எந்த தேர்தலிலும் சமாஜ்வாடியுடன் கூட்டணி கிடையாது என மாயாவதி தெரிவித்துள்ளார். இதற்கு சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம்சங்கர் வித்யார்த்தி பதில் தெரிவிக்கையில், மாயாவதி அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், அவரது இந்த நடவடிக்கை சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். 

Next Story