70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது - பிரதமர் மோடி


70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Jun 2019 12:37 PM GMT (Updated: 25 Jun 2019 1:03 PM GMT)

மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது 70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து  பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

எதிர்க்கட்சியினரின் செயல்பாடு பாராட்டுக்குரியது. வளர்ச்சிக்கான எந்த ஒரு வாய்ப்பையும் நாடு தவறவிடக்கூடாது. நாட்டின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் . வலிமை, பாதுகாப்பு, ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்.

2004-2014 க்கு இடையில் ஆட்சியில் இருந்த அரசுக்கு நான் சவால் விடுகிறேன்.  அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் பணியை அவர்கள் எப்போதாவது பாராட்டியிருந்தால் குறிப்பிட வேண்டும். நரசிம்ம ராவ் ஜியின் நல்ல திட்டங்களை  பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா? இந்த விவாதத்தில் அதே மக்களவையில் மன்மோகன் சிங் ஜி பற்றி கூட அவர்கள் பேசவில்லை.

தேசிய வளர்ச்சிக்கு ஒரு சில  தலைவர்கள்  மட்டுமே பங்களித்ததாக சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் அந்த சில பெயர்களை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள், மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள். நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திருப்பதை நாங்கள் உணர்கிறோம்.

பாஜக அரசு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா தந்தது. இதை யார் செய்தது? விவாதத்தின் போது சிலரால் கேட்கப்பட்டது. இன்று ஜூன் 25. எமெர்ஜென்சியை  விதித்தவர் யார்? அந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது, பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரம், ஊடக துறையை முடக்கிய நாள்.

எரிவாயு, மின்சாரம், கழிப்பறை வசதி கொண்டு வந்து மக்களை சிந்திக்க வைத்தோம். 70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது.

சுதந்திர போராட்டத்தின் போது துணிச்சலான பெண்களும், ஆண்களும் தேசத்துக்காக உயிர் துறந்தனர். நமது சுதந்திர போராளிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டியெழுப்ப வேண்டும். காந்தி ஜியின் 150 வது பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

Next Story