பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்; பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்


பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்;  பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்
x
தினத்தந்தி 26 Jun 2019 8:26 AM GMT (Updated: 26 Jun 2019 8:26 AM GMT)

பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி கேஜே அல்போன்ஸ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாட்டின் சில இடங்களில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக  குறிப்பிட்டு பேசினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கேரளாவைச் சேர்ந்த பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்,  பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதாக குறிப்பிட்டார். 

மேலும், கேஜே அல்போன்ஸ் கூறும் போது, “மோடி ஆட்சியில் தான் முன்பு எப்போதையும் விட ஜனநாயகம் சிறப்பாக விளங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சிக்கு வந்தால், கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவார்கள், தேவாலயங்கள் எரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.  பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு கிறிஸ்தவ ஆலயமாவது தாக்கப்பட்டதை நீங்கள் கண்டுள்ளீர்களா? முன்பு எப்போதையும் விட மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார். 

மோடியின் முந்தைய அமைச்சரவையில் அங்கம் வகித்த கேஜே அல்போன்சுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

Next Story