ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்


ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்
x
தினத்தந்தி 26 Jun 2019 1:33 PM GMT (Updated: 26 Jun 2019 1:33 PM GMT)

ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.


3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்தையை மேற்கொண்டார். 

ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 பாதுகாப்பு ஏவுகணையை வாங்குவதற்கு அமெரிக்கா மிரட்டலை வெளியிட்டது. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மைக் பாம்பியோ-ஜெய்சங்கர் இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவால் பொருளாதார தடைவிதிக்கப்பட்ட ரஷியா உள்பட பிறநாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களில் தேச நலனுக்காக முன்நோக்கி செல்லும் என்பதை இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

 ரஷியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் அமெரிக்காவின் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எங்களுக்கு பல உறவுகள் உள்ளன... எங்களுடைய உறவுகளுக்கு ஒரு வரலாறு உண்டு. நம்முடைய தேச நலனுக்கானதை நாம் செய்வோம். ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் தேச நலனைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ளும் திறன் மூலோபாய நட்பாகும்,” எனக் கூறியுள்ளார். இந்தியா-அமெரிக்க மூலோபாய நட்பு என்பது அழமான, பரந்த ஒருங்கிணைப்பை அடிப்படையாக கொண்டது என்பதை குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர்,பாம்பியோவுடன் எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். 

Next Story