ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை: மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி சந்திப்பு - இரு தரப்பு உறவை வலுப்படுத்த முக்கிய ஆலோசனை நடத்தினர்


ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை: மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி சந்திப்பு - இரு தரப்பு உறவை வலுப்படுத்த முக்கிய ஆலோசனை நடத்தினர்
x
தினத்தந்தி 26 Jun 2019 11:30 PM GMT (Updated: 26 Jun 2019 10:29 PM GMT)

பிரதமர் மோடியை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

புதுடெல்லி,

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 2 நாள் ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை (28-ந் தேதி தொடங்குகிறது.). 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின் இடையே அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

அந்த பேச்சுவார்த்தையின் போது இடம்பெற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து, இந்திய தலைவர்களை சந்தித்து, இறுதி செய்வதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு டெல்லி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தெற்கு பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் மைக் பாம்பியோ நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இரு தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்தார்.

இதையொட்டி அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பிணைப்பு பிரிக்க முடியாதது” என கூறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் மைக் பாம்பியோ சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்பின்னர் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை மைக் பாம்பியோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ஒசாகா ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசுகிறபோது இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் ‘எச் 1-பி’ விசா விவகாரம். வர்த்தக பிரச்சினைகள், ரஷியாவுடன் இந்தியா ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக செய்துள்ள ஒப்பந்தம், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையால் இந்தியாவுக்கு எழும் பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் வர்த்தகம், பயங்கரவாதம், எரிசக்தி, ராணுவத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இரு தரப்பு நலன் சார்ந்த விஷயங்களும் இந்தப் பேச்சு வார்த்தையில் இடம் பிடித்தன.

பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

மைக் பாம்பியோவுக்கு ஜெய்சங்கர் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.


Next Story