கோதாவரி ஆற்றில் கட்டப்படும் ரூ.2,121 கோடி அணை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி - மத்திய அரசு வழங்கியது


கோதாவரி ஆற்றில் கட்டப்படும் ரூ.2,121 கோடி அணை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி - மத்திய அரசு வழங்கியது
x
தினத்தந்தி 30 Jun 2019 11:00 PM GMT (Updated: 30 Jun 2019 9:29 PM GMT)

கோதாவரி ஆற்றில் கட்டப்படும் ரூ.2,121 கோடி அணை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியினை மத்திய அரசு வழங்கியது.

புதுடெல்லி,

தெலுங்கானாவின் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே ரூ.2,121 கோடி மதிப்பில் பிரமாண்ட அணை ஒன்றை கட்டுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. பி.வி.நரசிம்மராவ் கந்தனபள்ளி சுஜாரா சிரந்தி திட்டம் என பெயரில் கட்டப்படும் இந்த அணைக்கட்டு, 23 மீட்டர் உயரம், 1,132 மீட்டர் நீளத்தில் கட்டப்படுகிறது.

674.18 ஹெக்டேரில் கட்டப்படும் இந்த அணை திட்டத்துக்கு 580.18 ஹெக்டேர் நிலம் ஆற்றப்படுகையில் இருந்தும், 94 ஹெக்டேர் நிலம் தனியாரிடம் இருந்தும் பெறப்படுகிறது. இந்த திட்டத்தால் 3 மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என மாநில அரசு கூறியுள்ளது.

இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு மத்திய அரசின் பசுமைக்குழுவிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கானா அரசு விண்ணப்பித்தது. ஆனால் அதில் போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி இந்த அனுமதியை பசுமைக்குழு நிறுத்தி வைத்தது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் ஆவணங்களை மத்திய பசுமைக்குழு கடந்த மாதம் ஆய்வு செய்தது.

இதைத்தொடர்ந்து இந்த அணை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக பசுமைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story