வாரணாசியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்டத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி


வாரணாசியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்டத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 6 July 2019 7:06 AM GMT (Updated: 6 July 2019 10:40 AM GMT)

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

வாரணாசி,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.  தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் மோடி பிரதமரானார்.

இந்நிலையில், பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்ட தொடக்கத்திற்காக வாரணாசி தொகுதிக்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

அவரை வாரணாசி விமான நிலையத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில தலைவர் எம்.என். பாண்டே ஆகியோர் வரவேற்றனர்.

வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலை திறப்பும் நடைபெறுகிறது.  இதற்காக வருகை தந்த சாஸ்திரியின் மகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனில் சாஸ்திரி பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை திறந்து வைத்துள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் சாஸ்திரியின் இளைய மகன் மற்றும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுனில் சாஸ்திரியும் கலந்து கொண்டார்.

இதன்பின் மரக்கன்று நடு விழாவையும் பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைத்துள்ளார்.  தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்து உள்ளார்.

Next Story