பீர் பாட்டிலில் காந்தி படம் விவகாரம்: இஸ்ரேல் கம்பெனி மன்னிப்பு கோரியது - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்


பீர் பாட்டிலில் காந்தி படம் விவகாரம்: இஸ்ரேல் கம்பெனி மன்னிப்பு கோரியது - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்
x
தினத்தந்தி 6 July 2019 11:15 PM GMT (Updated: 6 July 2019 10:29 PM GMT)

பீர் பாட்டிலில் காந்தி படம் விவகாரத்தில், இஸ்ரேல் கம்பெனி மன்னிப்பு கோரியதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இஸ்ரேலில் உள்ள ஒரு மதுபான கம்பெனி தனது தயாரிப்பான பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை பிரசுரித்து விற்பனை செய்து வந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற மேலவையில் பூஜ்ஜியநேரத்தில் ஆம்ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் இந்த விவகாரத்தை எழுப்பியதோடு, அதுபற்றிய கடிதத்தையும் சபையில் அளித்தார். மகாத்மாவை அவமானப்படுத்தும் வகையில் பீர் பாட்டிலில் தேச தந்தை காந்தி படத்தை வெளியிட்ட பீர் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் அளிக்கையில், “உறுப்பினரின் கோபத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகம் மூலம் இஸ்ரேலில் உள்ள அந்த கம்பெனிக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் இஸ்ரேல் கம்பெனி காந்தி படம் ஒட்டிய பீர் பாட்டில்கள் விற்பனை நிறுத்தியதோடு, வெளி மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பிய பீர் பாட்டில்களையும் திரும்ப பெற்றுள்ளது. மேலும் பீர் கம்பெனி தங்களது செயலுக்காக இதயபூர்வமான வருத்தத்தை இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவித்து உள்ளது” என்றார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கரை. நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு கேட்டுக் கொண்டார்.


Next Story