கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் ஓட்டலில் தங்க வைப்பு


கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் ஓட்டலில் தங்க வைப்பு
x
தினத்தந்தி 7 July 2019 2:59 AM GMT (Updated: 7 July 2019 2:59 AM GMT)

கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரது ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் மந்திரி பதவி கிடைக்காமல் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜனதா காய்களை நகர்த்துவதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்து, இதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத்தனர்.

பின்னர் அந்த எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வாஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார்கள்.  பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றனர்.

மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இன்று இரவு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவுக்கு திரும்புகிறார்.

வருகிற 12-ந்தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story