உலகின் எந்த மூலையிலும் விசாரணை நடத்தும் வகையில் என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது


உலகின் எந்த மூலையிலும் விசாரணை நடத்தும் வகையில் என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
x
தினத்தந்தி 15 July 2019 3:48 PM GMT (Updated: 15 July 2019 3:48 PM GMT)

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.



மும்பை தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக, கடந்த 2009-ம் ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை சட்டப்படி இது உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், என்.ஐ.ஏ.வை மேலும் வலுப்படுத்துவதற்காக, தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கும், இந்தியர்களின் நலனுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்கள் பற்றி விசாரிப்பதற்காக என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்க தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியது. இந்த மசோதாவை, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி கி‌ஷன் ரெட்டி ஏற்கனவே தாக்கல் செய்தார்.

 இந்தியர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிராக உலகின் எந்த மூலையில் தாக்குதல் நடந்தாலும் அதுகுறித்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. மேலும், இணையவழி குற்றங்கள், ஆள் கடத்தல் போன்றவற்றையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும் என்றார்.   இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு அமித் ஷாவும், கி‌ஷன் ரெட்டியும் பதில் அளித்து பேசினர். அமித் ஷா பேசுகையில்,  என்.ஐ.ஏ. எவ்வகையிலும் தவறாக பயன்படுத்தப்படாது. என்.ஐ.ஏ. இதுவரை 272 வழக்குகளை கையில் எடுத்துள்ளது. இவற்றில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபணம் 90 சதவீதம் ஆகும்.

ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுத தயாரிப்பு, விற்பனை, இணையவழி பயங்கரவாதம் ஆகிய குற்றங்களையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும்.

இந்த மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவோம். ‘பொடா’ சட்டம், பயனுடையது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரத்து செய்துவிட்டது. ஆனால் நாங்கள் பயங்கரவாத செயல்களை செய்தவர்கள் யார்? எந்த மதம், இனத்தை சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றார்.  பின்னர், என்.ஐ.ஏ. மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக அதன் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்தார். 278 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். 6 பேர் மட்டும் எதிர்த்து ஓட்டளித்தனர். எனவே, மசோதா நிறைவேறியது.


Next Story