நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை


நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 July 2019 6:41 AM GMT (Updated: 16 July 2019 6:41 AM GMT)

நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு பொறுப்பேற்ற பிறகு, பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை கொள்கைகளை தீர்மானிப்பதில், தன்னுடைய பிடியை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பேரழிவுக்கு வித்திடும் ஆயுதங்களின் பரவல், சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இத்தகைய ஆயுதங்களையும் தொழில்நுட்பங்களையும் கையகப்படுத்துவதற்கு தீவிரவாதிகள் முயற்சி செய்வது மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

மேலும், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிப்பதோடு, அண்டை நாடுகளை குறிவைக்கும் தீவிரவாத இயக்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவுவதற்கு உதவும் வகையில், இந்திய படைகளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கோடு, எல்லைக்கு அப்பாலிருந்து இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்கும் வேலையையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்கிறது.

இந்த ஆண்டில் இதுவரை, எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவது, 43 சதவீதம் குறைந்திருப்பதோடு, எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குவதில் கனரக ஆயுதங்களின் பயன்பாடும் குறைந்துள்ளது.

பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது உள்ளிட்ட பதிலடி நடவடிக்கைகளால் இதுகுறைந்துள்ளதே தவிர, பாகிஸ்தானின் நேர்மையான மனமாற்றம் இதற்கு காரணம் அல்ல. மத அடிப்படைவாதம் அதிகரிப்பது, இனரீதியான, பிரதேச ரீதியான மோதல்கள் அதிகரித்திருப்பது, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளையும் தாண்டி, உள்நாட்டுப் பகுதிகளுக்கும் மோதல் பரவியிருப்பது போன்றவை பாகிஸ்தானை கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது.

இருப்பினும், பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை அதிகரித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியிருப்பது, ஏற்கனவே செய்யப்பட்ட சர்வதேச மதிப்பீடுகளோடு ஒத்துப்போகிறது.

இந்தியாவில் 130 முதல் 140 அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வரை உள்ளது என்றும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை, 250 வரை அதிகரிக்கும் என்றும் சர்வதேச மதிப்பீடுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

சீனா மற்றும் வடகொரியாவின் உதவியோடு பாகிஸ்தான் அணுஆயுதங்களை பெருக்கியுள்ளது என்று சர்வதேச மதிப்பீடுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story