ராம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: டிம்பிள் யாதவ்-ஜெயப்பிரதா போட்டி?


ராம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: டிம்பிள் யாதவ்-ஜெயப்பிரதா போட்டி?
x
தினத்தந்தி 16 July 2019 9:30 PM GMT (Updated: 16 July 2019 8:21 PM GMT)

ராம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், டிம்பிள் யாதவ்-ஜெயப்பிரதா ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி முன்னணி தலைவர் அசம்கான் 9 முறை வெற்றிபெற்றுள்ளார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்டதால் அந்த தொகுதி காலியாக உள்ளது. அங்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது.

இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை நிறுத்த அக்கட்சி ஆலோசித்து வருகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாது என அக்கட்சி நம்புகிறது. அதே சமயம் பா.ஜனதா அந்த தொகுதியில் இதுவரை வெற்றி பெறாததால், இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. பிரபல நடிகை ஜெயப்பிரதாவை அந்த தொகுதியில் நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். இதன்மூலம் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு சுவாரசியமான தேர்தல் நடைபெற உள்ளது.


Next Story