கனமழை காரணமாக அசாம், பீகார் மாநிலங்களில் பலி எண்ணிக்கை உயர்வு


கனமழை காரணமாக அசாம், பீகார் மாநிலங்களில் பலி எண்ணிக்கை உயர்வு
x
தினத்தந்தி 17 July 2019 6:00 PM GMT (Updated: 17 July 2019 6:00 PM GMT)

கனமழை காரணமாக அசாம், பீகார் மாநிலங்களில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கவுகாத்தி,

இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து உள்ளது.  வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாம் மற்றும் பீகாரில் பெய்து வரும் கன மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அசாம் மாநிலத்திலும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  28 மாவட்டங்களில் 52 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.  4,600 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் 11 நதிகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் 380-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவீதம் வெள்ள நீரில் மிதக்கின்றன.  

அசாமிற்கு நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.251.5 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.  ஜலசக்தி துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்வத், வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அசாம் சென்றுள்ளார். அசாம் மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனாவலிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இதேபோல் பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கி உள்ளது. அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளநீர் அபாயக்கட்டத்தை கடந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் மக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் சூழ்ந்ததால் பல ஊர்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 67 ஆக உயர்ந்துள்ளதாகவும், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்புக்குழுவினர் ஆகியோர் ராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் மந்திரி நிதிஷ் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story