தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் மாதம் அறிவிக்கவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் மாதம் அறிவிக்கவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 July 2019 11:30 PM GMT (Updated: 17 July 2019 10:25 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் மாதம் அறிவிக்கவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி வக்கீல் ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும், எனவே விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை பணி நிறைவு பெற்று, அதுபற்றிய அறிவிப்பாணை அரசு இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை பணிகள் எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றியும் உடனடியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இரு நாட்களுக்கு முன்பு பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கடைபிடித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை தேசிய தகவல் மையத்துக்கு வழங்கும் பணி மற்றும் சில மாவட்டங்களில் நடைபெற்ற வறட்சி நிவாரண பணிகள் போன்ற தவிர்க்க இயலாத சில காரணங்களால் மேலும் 60 நாட்கள் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்பதால், மேலும் கூடுதலாக 60 நாட்கள் காலஅவகாசம் வழங்குமாறு கோரப்படுகிறது. வருகிற அக்டோபர் இறுதி வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஜெயசுகின் தானே ஆஜரானார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரத்தில் உள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதிகள், அக்டோபர் மாத இறுதியில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.


Next Story