விதிமீறலை பதிவு செய்வதா? போக்குவரத்து போலீஸ்காரருக்கு அடி; பெண் அரசியல் தலைவர் அடாவடி


விதிமீறலை பதிவு செய்வதா? போக்குவரத்து போலீஸ்காரருக்கு அடி; பெண் அரசியல் தலைவர் அடாவடி
x
தினத்தந்தி 19 July 2019 9:45 PM GMT (Updated: 19 July 2019 9:41 PM GMT)

பெண் அரசியல் தலைவர் ஒருவர், விதிமீறலை பதிவு செய்த போக்குவரத்து போலீஸ்காரரை அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மகளிர் அணியின் உள்ளூர் தலைவராக இருப்பவர் மகமுதா பேகம். இவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர், ஐதராபாத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அது விதிமீறல் குற்றம் என்பதால், பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் முகமது முஜாபர் என்பவர் அதை கேமராவில் பதிவு செய்தார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரில் ஒருவர் அதை கண்டு, போலீஸ்காரரை சரமாரியாக திட்டிவிட்டு அங்கிருந்து போய் விட்டார்.

15 நிமிடங்களில் அவர்கள் 3 பேரும் மகமுதா பேகம் மற்றும் அவரது கணவருடன் திரும்ப வந்தனர். வந்த வேகத்தில் அந்த போலீஸ்காரரை மகமுதா பேகம், தனது காலணியால் அடித்தார். மேலும், பேகத்தின் கணவர் உள்ளிட்ட 4 பேர் அந்த போலீஸ்காரரை நையப் புடைத்தனர். அத்துடன் பேகம், போலீஸ்காரரிடம் இருந்த கேமராவையும் பறித்துச்சென்றார்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ்காரர் முகமது முஜாபர் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், பேகத்தை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Next Story