பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன்: பிரியங்கா காந்தி திட்டவட்டம்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன் என பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மிர்சாபூர்,
முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தில், தாங்கள் பயிர் செய்து வந்த நிலத்தை பழங்குடி விவசாயிகள் விட்டுக் கொடுக்க மறுத்தனர்.
இதன் காரணமாக கடந்த புதன்கிழமை அவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, வாரணாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியதில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிற ஊர் தலைவர் யக்யா தத், அவரது சகோதரர் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சினை, அந்த மாநிலத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் (வருவாய்) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அறிவித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ. மற்றும் 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் அறிவித்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில (கிழக்கு) பொறுப்பாளருமான பிரியங்காகாந்தி, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பார்த்து ஆறுதல் கூற விரும்பினார். இதற்காக அவர் நேற்று உத்தரபிரதேசம் சென்றார். முதலில் வாரணாசி சென்றிறங்கிய அவர், சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து சோன்பத்ராவுக்கு அவர் புறப்பட்டார். ஆனால் அவரை வாரணாசி-மிர்சாப்பூர் எல்லையில் உள்ள நாராயண்பூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
உடனே அவர் அங்கேயே நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சுற்றிலும் காங்கிரஸ் தொண்டர்களும், பாதுகாப்பு படையினரும் சூழ்ந்தனர். இதனால் பெரும் பதற்றம் உருவானது. பிரியங்கா காந்தியை போலீசார் அருகில் உள்ள சுனார் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.
அங்கு பிரியங்கா காந்தியை காவல்துறை மூத்த அதிகாரிகள், நள்ளிரவு சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்பிச்செல்ல மாட்டேன் என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக கூறினார்.
Related Tags :
Next Story