ரகசிய காதலியுடன் கையும் களவுமாக மனைவியிடம் சிக்கிய கணவன் இருவருக்கும் தர்ம அடி


ரகசிய காதலியுடன் கையும் களவுமாக  மனைவியிடம் சிக்கிய கணவன் இருவருக்கும் தர்ம அடி
x
தினத்தந்தி 26 July 2019 6:33 AM GMT (Updated: 26 July 2019 6:33 AM GMT)

மனைவியை உதாசீனப்படுத்தி விட்டு ரகசிய காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். மனைவியின் உறவினர்கள் இருவரையும் புரட்டி எடுத்தனர்.

ஐதராபாத்

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கொட்டகொம்பு கூடம் பகுதியைச் சேர்ந்த  மென்பொறியாளர் லட்சுமணன். இவருக்கும் சுஜன்யா என்ற பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு  திருமணம் நடந்து உள்ளது. பொறியாளரான லட்சுமணன் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளம் மென்பொறியாளரான அனுஷா என்ற பெண்ணுடன் ரகசிய காதல் வைத்து இருந்தார். அவரது மனைவி சுஜன்யா பலமுறை சொல்லியும் லட்சுமணன் திருந்தவில்லை. இந்த நிலையில், சுஜன்யா  விவகாரத்து கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். லட்சுமணன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், லட்சுமணனும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனுஷா என்ற பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பம் நடத்திக்  கொண்டிருப்பதாக தெரிய வர அந்த குடியிருப்புக்கு தனது உறவினர்களுடன் ரகசியமாக சென்ற சுஜன்யா கதவை தட்டியுள்ளார். அப்பொழுது கதவை தட்டுவது தன்னுடைய மனைவி தான் என்று அறியாமல் கதவைத் திறந்த கணவன் லட்சுமணனை பார்த்த உடனேயே வெறி கொண்ட வேங்கையாக அவரை அடித்து துவம்சம் செய்து உள்ளார் மனைவி சுஜன்யா.

அதேபோல் அவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அனுஷா என்ற பெண்ணையும் சரமாரியாக முடியைப் பிடித்து வளைத்து போட்டு அடித்து உள்ளார்.

உடன் வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை வெளியே இழுத்துச் சென்று தாக்கி உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறையில் நடந்த இந்த வெறிகொண்ட தாக்குதல் இறுதியில் நடுவீதிக்கு வந்தது. கள்ளக்காதலில் ஈடுபட்ட இருவரையும் வீதிக்கு அழைத்து வந்த மனைவி சுஜன்யா அந்தப் பெண்ணை நடுத்தெருவில் நிற்க வைத்து காலில் அணிந்திருந்த காலணியால் சரமாரியாக தாக்கி உள்ளார். பின்னர் இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

கள்ளக்காதல் கிரிமினல் குற்றம் இல்லை என்று சில மாதங்களுக்கு முன் உத்தரவு வந்தாலும், முதல் மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த லட்சுமணன் வழக்கு முதல் மனைவியின் ஆட்சேபனை என்கிற அடிப்படையிலும், சுஜன்யா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்க்கு பதில் சொல்லாததால் ஷோ காஸ் என்கிற அடிப்படையிலும் லட்சுமணன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Next Story