காஃபி டே நிறுவன அதிபர் சித்தார்த் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுப்பு
காணாமல் போன காஃபி டே நிறுவனத்தின் அதிபர் சித்தார்த் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ‘காபி டே’ எனும் பிரபலமான தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், காபி டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சித்தார்த் தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார். சக்லேஷ்புரா அருகே சென்றபோது டிரைவரிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த் கூறினார். அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டிச் சென்றார்.
இரவு 7.15 மணிக்கு மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த் தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்குதிரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த் மாயமாகிவிட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தேடிப்பார்த்தனர். 36 மணி நேரமாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், வி.ஜி. சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story