7 வயது குழந்தை கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்தவன் 3 வயது சிறுமியை கொடூரமாக கொன்றான்


7 வயது குழந்தை கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்தவன் 3 வயது சிறுமியை கொடூரமாக கொன்றான்
x
தினத்தந்தி 31 July 2019 10:44 AM GMT (Updated: 31 July 2019 10:44 AM GMT)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலம் தடாநகர் ரெயில் நிலையத்தில் கடந்தவாரம் செவ்வாய் கிழமை 3 வயது குழந்தை ஒன்று  மாயமானது. 

மாயமான குழந்தை தொடர்பாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ரெயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ரின்கு என்பவன் குழந்தையை கடத்தி செல்வது தெரியவந்தது. 

அவனை திங்கள் கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  போலீசார் விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில் சிறுமியின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரின்குவை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் மர்ம பகுதியில் காயங்கள் உள்ளன. எனவே சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையே கைது செய்யப்பட்டவன் ஏற்கனவே இதுபோன்ற கொடூரமான செயலை செய்தவன் என்பது தெரிய வந்துள்ளது. 2015-ம் ஆண்டு 7 வயது குழந்தையை கடத்தி கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றவன். சிறையில் இரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்னர்தான் விடுதலையாகியுள்ளான். விடுதலையாகிய மறுவாரமே மற்றொரு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளான். 

இப்போது 3 வயது சிறுமியை கொலை செய்த விவகாரத்தில் அவனுக்கு துணையாக இருந்த கைலாஷ் என்பவனையும் போலீஸ் கைது செய்துள்ளது. ரெயில் நிலையத்தில் தூங்கிய குழந்தையை கடத்தி கொலை செய்தவனை அப்படியே கொலை செய்ய வேண்டும் என்று மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story