பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை


பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 2 Aug 2019 9:24 PM GMT (Updated: 2 Aug 2019 9:24 PM GMT)

பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிம்தேகாவில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி நீரஜ்குமார் ஸ்ரீவஸ்தவ், குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

குற்றவாளி சிறுவன் என்பதால், அவனை உடனடியாக சிறைக்கு அனுப்பவில்லை. 21 வயது வரை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அவன் காவலில் வைக்கப்படுவான். அங்கு அவனுக்கு கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவருக்கு ஏற்கனவே 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது தண்டனை பெற்ற சிறுவன், சம்பவத்தன்று கடைக்கு முட்டை வாங்க சென்ற சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அருகில் உள்ள அணைக்கட்டு பகுதியில் கூட்டாளிகளுடன் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டான்.


Next Story