எல்லையில் நவீன ஆயுதங்கள் பயன்பாடு: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு


எல்லையில் நவீன ஆயுதங்கள் பயன்பாடு: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
x
தினத்தந்தி 3 Aug 2019 6:47 PM GMT (Updated: 3 Aug 2019 6:47 PM GMT)

எல்லையில் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாக கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீரில் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்களும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பொதுமக்களை குறிவைத்து நவீன ஆயுதங்களை, அதாவது கொத்து வெடிபொருட்களை பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. இதில் கடந்த 30-ந் தேதி 2 பேர் உயிரிழந்தாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

இந்திய வீரர்கள் வேண்டுமென்றே நடத்தி வரும் இந்த தாக்குதல் ஜெனீவா மாநாடு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்த பிரச்சினையை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்வோம் என அந்த நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மக்முத் குரேஷியும் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு வெறும் பிரசாரம்தான் என இந்திய ராணுவம் கூறியுள்ளது. பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியது.

Next Story