ஈராக்கில் வான்தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி


ஈராக்கில் வான்தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 5 Aug 2019 7:30 PM GMT (Updated: 5 Aug 2019 7:13 PM GMT)

ஈராக்கில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகினர்.

பாக்தாத்,

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் ஈராக்கை புகலிடமாக கொண்டு பயங்கரவாதத்தை பரப்பி வந்தது. அவர்களை ஒடுக்க முடியாமல் ஈராக் ராணுவம் திணறியது. அதன் பின்னர் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் அங்கு களம் இறங்கி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை மீட்டெடுத்தன. கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமெரிக்க படைகள் அங்கிருந்து திரும்பின. இந்த நிலையில் தற்போது ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் காலூன்றி ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, தரைவழியாவும், வான்வழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வடக்கு மாகாணமான நின்னேவாவில் உள்ள மாக்மூர் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிலர் ஒன்றுகூடி, தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ விமானங்கள் அங்கு விரைந்து, பயங்கரவாதிகள் குழுமியிருந்த கட்டிடத்தின் மீது குண்டுகளை வீசின. இதில் 6 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

Next Story