பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு - தமிழக கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார்


பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு - தமிழக கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார்
x
தினத்தந்தி 5 Aug 2019 9:15 PM GMT (Updated: 5 Aug 2019 9:15 PM GMT)

பிரதமர் மோடியை வைகோ சந்தித்து, தமிழக கோரிக்கைகள் தொடர்பாக மனுவினை அளித்தார்.

புதுடெல்லி,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆன பிறகு முதன்முதலாக பிரதமர் நரேந்திரமோடியை நேற்று தனியாக சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பின்போது ஜி.யு. போப், ட்ரூ, ஜான் லாசரஸ் ஆகியோரின் தமிழ் மற்றும் ஆங்கில திருக்குறள் நூல்களை பரிசாக வழங்கி, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழகம் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார். அந்த மனுவில், “இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைகள் தயாரிப்பு தொழிலை காக்க வேண்டும். நியூட்ரினோ மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும். அணை பாதுகாப்பு மசோதா கூடாது. கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை கொட்டக்கூடாது. பயிர்க்காப்பீடு திட்ட பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாக போய்ச் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகேதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும். அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக ம.தி.மு.க. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story