பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பலாத்காரம் செய்யப்பட்டு விபத்தில் சிக்கிய பெண் உயிருக்கு போராட்டம் - எய்ம்ஸ்


பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பலாத்காரம் செய்யப்பட்டு விபத்தில் சிக்கிய பெண் உயிருக்கு போராட்டம் - எய்ம்ஸ்
x
தினத்தந்தி 6 Aug 2019 12:27 PM GMT (Updated: 6 Aug 2019 12:27 PM GMT)

உன்னோவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, விபத்துக்குள் சிக்கிய பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரால் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்னதாக தீக்குளிக்க முயன்றதும் 2018-ம் ஆண்டு ஏப்ரலில் செங்கார் கைது செய்யப்பட்டார். விசாரணையை சிபிஐ மேற்கொண்டது. ஜூலை 28-ம் தேதி சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமியின் உறவுக்காரப் பெண்கள் இருவர் உயிரிழந்தனர். வழக்கறிஞரும், பாதிக்கப்பட்ட சிறுமியும் படுகாயம் அடைந்தனர். 

பாதிக்கப்பட்ட பெண் லக்னோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை மோசமான நிலையிலே இருந்தது. பின்னர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. "பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சரியில்லாமல்தான் இருக்கிறது. ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ளார், பல்வேறு நிபுணர்கள் குழு அவருக்கு மருத்துவம் அளித்து வருகிறது,” என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story