சுஷ்மா சுவராஜ் மறைவு: “கருணை, மன உறுதியின் மறுவடிவம்” என்று மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு உருக்கம்


சுஷ்மா சுவராஜ் மறைவு: “கருணை, மன உறுதியின் மறுவடிவம்” என்று மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு உருக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 9:28 PM GMT)

முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை இரங்கல் தெரிவித்தது. அவர் கருணை மற்றும் மன உறுதியின் மறுவடிவம் என்று வெங்கையா நாயுடு உருக்கமாக கூறினார்.

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று இரங்கல் தெரிவித்தது.

சபை கூடியவுடன், சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அப்போது, பிரதமர் மோடியும் அவையில் இருந்தார். இரங்கல் தீர்மானத்தில் வெங்கையா நாயுடு கூறியதாவது:-

சுஷ்மா சுவராஜ், பல்வேறு முதல்முறை சாதனைகளை படைத்தவர். 25 வயதில் அரியானா மாநில மந்திரியாகி சாதனை படைத்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆனவுடன், அந்த துறைக்கு மனித முகம் கொடுத்தார். வெளிநாடுகளில் கஷ்டப்பட்ட இந்தியர்களை மீட்டுவர உதவினார்.

கருணை, மனஉறுதி, திறமை, பாசப்பிணைப்பு ஆகியவற்றின் மறுவடிவம்தான் சுஷ்மா ஆவார். அவரது எதிர்பாராத மரணத்தால், நாடு ஒரு திறமையான நிர்வாகியை, நாடாளுமன்றவாதியை இழந்துவிட்டது.

சுஷ்மா சுவராஜ் எனக்கு சகோதரி போன்றவர். எப்போதும் என்னை ‘அண்ணா’ என்றுதான் அழைப்பார். எனது வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சிகளிலும், கலாசார நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். ஒவ்வொரு ஆண்டும் ‘ரக்‌ஷாபந்தன்’ பண்டிகையின்போது, எனது கையில் ‘ராக்கி’ கயிறு கட்டுவார். ஆனால் இந்த ஆண்டு அந்த மரியாதை எனக்கு கிடைக்காது. ஒரு நல்ல சகோதரியை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

சுஷ்மா சுவராஜ், மிகச்சிறந்த பேச்சாளர். இந்தியிலும், ஆங்கிலத்திலும் நன்றாக பேசுவார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

காஷ்மீரை பிரிப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் கடைசியாக ‘டுவிட்டரில்’ பதிவு செய்தார். “என் வாழ்நாளில் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்” என்று அவர் கூறியிருந்தார். ஆனால், விதி அவரை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது.

அவர் இந்தியா எப்போதும் உயர்ந்த புகழுடன் திகழ வேண்டும் என்று கனவு கண்டவர். பொது வாழ்க்கையில் உள்ள அனை வருக்கும் அவரது சொல்லும், செயலும் வழி காட்டி யாக திகழும்.

சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவையில் 3 தடவையும், மக்களவையில் 4 தடவையும் உறுப்பினராக இருந்துள்ளார். வெளியுறவுத்துறை, நாடாளுமன்ற விவகாரம், சுகாதாரத்துறை போன்ற முக்கிய இலாகாக்களை கவனித்துள்ளார். எளிதில் அணுகக்கூடியவராக திகழ்ந்தார். அவரது மறைவுக்கு இந்த அவை இரங்கல் தெரிவிக்கிறது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, மாநிலங்களவை, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.


Next Story