தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் நிறுத்தம் ‘யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது’ பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்


தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் நிறுத்தம் ‘யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது’ பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்
x
தினத்தந்தி 9 Aug 2019 12:05 PM GMT (Updated: 9 Aug 2019 12:05 PM GMT)

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதில் கூறியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பதிலடி தருவதற்காக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியேற்றியது. இந்தியாவுடனான தூதரக உறவுகளை குறைத்துக்கொண்டது. வர்த்தக உறவை நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நேற்று நிறுத்தியது. இந்நிலையில் மற்றொரு ரெயில் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கோக்ராபூரிலிருந்து ராஜஸ்தானின் பர்மெர் வரையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் சாகித் ராஷித் பேசுகையில், “தார் எக்ஸ்பிரஸ் சேவையையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். நான் ரெயில்வே அமைச்சராக இருக்கும் வரையில் இருநாடுகள் இடையே ரெயில்கள் இயக்கப்படாது,” என பேசியுள்ளார். பாகிஸ்தான் போரில் ஈடுபடாது, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என இம்ரான் கான் கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்  பேசுகையில், பாகிஸ்தான் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது.  பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாகிஸ்தானால் இப்போது செய்யப்படும் அனைத்து காரியங்களும் இருதரப்பு உறவிற்கு ஆபத்தான் முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தான் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும் எனக் கூறியுள்ளார் ரவீஷ் குமார்.

Next Story