டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி: அருண் ஜெட்லி உடல்நிலையை வெங்கையா நாயுடு விசாரித்தார்


டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி: அருண் ஜெட்லி உடல்நிலையை வெங்கையா நாயுடு விசாரித்தார்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:38 PM GMT (Updated: 10 Aug 2019 10:38 PM GMT)

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மூச்சு திணறல், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காலை சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேற்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து டாக்டர்களை சந்தித்து விசாரித்தார்.

அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி செயலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “அருண் ஜெட்லிக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை உரிய பலனைத் தருகிறது. அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது என துணை ஜனாதிபதியிடம் டாக்டர்கள் கூறினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அருண் ஜெட்லியின் குடும்பத்தினரையும் வெங்கையா நாயுடு சந்தித்து பேசியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story