பாம்புக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு சென்ற முன்னாள் ராணுவ வீரர்


பாம்புக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு சென்ற முன்னாள் ராணுவ வீரர்
x
தினத்தந்தி 13 Aug 2019 7:41 AM GMT (Updated: 13 Aug 2019 7:41 AM GMT)

பாம்புக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.

புவனேஸ்வர்,

கடந்த சனிக்கிழமையன்று, 59 வயதான சமூக சேவையாளரும், முன்னாள் ராணுவ வீரருமான மனோஜ் குமார் தாஸ் தனது வீட்டின் பின்புறத்தில் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வயிற்றில் காயங்களுடன் மரங்களுக்கு இடையே சிக்கி இருப்பதை கண்டார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாம்புகளை மீட்டு வரும் தாஸ் அந்த பாம்பை  பத்திரமாக மீட்டார். பின்பு அதனை சிகிச்சைக்காக ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தார். அடுத்த நாள், தாஸ் பாம்பை உள்ளூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த மருத்துவமனை பூட்டி இருந்தது.

உடனடியாக அவர் மாநிலத்தின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான ஃபக்கீர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்

மருத்துவமனைக்கு சென்ற அவர்  மருத்துவமனையில்  ஒபி சீட் கவுண்டரில்  பாம்பின் பெயர் சாபா (ஒடியா மொழியில்) என குறிப்பிட்டார். அதன் வயது 7  என்றும் ஆண் என்றும் கூறினார். ஆனால் ஓபி சீட் எழுதியவருக்கு பாம்புக்குதான் சிகிச்சை என தெரியவில்லை.

இது குறித்து தாஸ் கூறும்போது, கவுண்டரில் இருந்தவர் நோயாளியின் பெயரைப் பற்றி என்னிடம் கேட்டபோது, நான் சப்பா என்றேன். அதன் வயது மற்றும் பாலியல் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது. நான் அவரிடம் 7 வயது ஆண் பாம்பு என்று சொன்னேன்.

பின்னர் சிகிச்சைக்காக துணை மருத்துவ ஊழியர்கள்  காயமடைந்த  நோயாளி சப்பாவை தனது பையில் இருந்து வெளியே எடுத்தபோது அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர்.

அவர்கள் அதற்கு கட்டுப்போட  மறுத்துவிட்டனர். பாம்புக்கு சிகிச்சையளிக்க தாஸ் கேட்டுக்கொண்டபோது பயந்துபோன அவர்கள் கால்நடை மருத்துவரிடம் காட்டுமாறு கூறினார்கள்.

மருத்துவர் ஒரு ஆண்டிசெப்டிக் களிம்பை பரிந்துரைத்தார்.

இது குறித்து தாஸ் கூறும்போது, பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பியதாலும், கால்நடை மருத்துவமனையை 24 மணி நேரம் திறந்து  வைத்திருக்க வேண்டியும் தான் வேண்டும் என்றே  பாம்பை மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக  என்று தாஸ் கூறினார்.

"மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் உடனடி சிகிச்சை தேவை, கால்நடை மருத்துவமனை நீண்ட நேரம் திறந்திருக்க வேண்டும். தவிர, அனைத்து பாம்புகளும் விஷம் கொண்டவை அல்ல என தாஸ் கூறினார்.

Next Story