ஜம்மு-காஷ்மீர் குறித்த எங்கள் முடிவு அரசியல் அல்ல, தேசிய நலன் -பிரதமர் மோடி


ஜம்மு-காஷ்மீர் குறித்த எங்கள் முடிவு அரசியல் அல்ல, தேசிய நலன் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Aug 2019 10:20 AM GMT (Updated: 14 Aug 2019 10:20 AM GMT)

ஜம்மு-காஷ்மீர் குறித்த எங்கள் முடிவு அரசியல் அல்ல, தேசிய நலன்களுக்கானது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

புதுடெல்லி,

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்று 75 நாட்களை நிறைவு செய்துள்ள மோடி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சரியான நோக்கங்கள், தெளிவான கொள்கைகள் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. சந்திரயான் 2, முத்தலாக் தடைச் சட்டம், நீர் விநியோகம் மற்றும் மேலாண்மைக்காக ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.  விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்  செயல்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறையில் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊழலின் மறைவிடமாக இந்திய மருத்துவக் கவுன்சில் விளங்கியதாக நீதிமன்றங்கள் சாடியுள்ளன. நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினையை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற காரணத்தால் தான் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையமானது மருத்துவக் கல்வியின் தரத்தை  மேம்படுத்தும். மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மருத்துவக் கல்விக்கான கட்டணம் குறையும். இந்த கல்வி ஆண்டில் 24 புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, மருத்துப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.

3 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருப்பது உறுதி செய்யப்படும். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, அறிவியல் கண்டுபிடிப்புகளை  ஊக்குவித்தல் ஆகிய அடிப்படையில்  பள்ளி கல்வியின் தரம் மேம்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கத்தை காட்டிலும் பெரிய முடிவு ஒன்று இருக்க முடியாது.சட்டப்பிரிவு 370, 35 ஏ  ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் முழுமையாக தனிமைப்படுத்தி விட்டது. அந்த சட்டப்பிரிவுகளால் என்ன பயன் என்ற அடிப்படைக் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?.

தீவிரவாதிகள் மீது பரிதாபம் கொண்டோரும், பரம்பரை அரசியல்வாதிகளும் தான் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்கின்றனர். இது தேச நலன் சார்ந்த பிரச்சினை. மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் மேம்படுத்தப்படும்.

அரசியல் மட்டத்தில் வளைகுடாவிற்கு நாம் சென்றது முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னேற்றம் அடைந்து உள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

Next Story