மத்திய பிரதேசத்தில் கனமழை: 3 ஆயிரம் பேர் தவிப்பு; பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


மத்திய பிரதேசத்தில் கனமழை:  3 ஆயிரம் பேர் தவிப்பு; பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 3:07 PM GMT (Updated: 15 Aug 2019 3:07 PM GMT)

மத்திய பிரதேசத்தில் கனமழையை முன்னிட்டு பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜ்கார்,

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  தீவாஸ் மாவட்டத்தில் நகர சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.  வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது.  இதில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கால்வாயின் முன் நின்று செல்பி எடுத்த பேராசிரியர் குப்தா, அவரது மனைவி பிந்து (வயது 42) மற்றும் அவர்களின் மகள் அக்ரிதி (வயது 20) ஆகியோர் தவறி விழுந்து நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அவர்களில் குப்தா மீட்கப்பட்டார்.  மற்ற 2 பேரின் இறந்த உடல்கள் பின் மீட்கப்பட்டன.  பாபுலால் என்பவரும் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.  10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  அங்கு 3 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், மாண்ட்சாரில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று ராஜ்கார் மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 16ந்தேதி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  இதனை மாவட்ட கல்வி அதிகாரி கூறியுள்ளார்.

Next Story