சுயேட்சை எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள்


சுயேட்சை எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:05 AM GMT (Updated: 17 Aug 2019 11:05 AM GMT)

பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் மொகாமா  தொகுதி எம்.எல்.ஏ. அனந்த் சிங். முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம்  கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவாகி இருக்கிறார்.  அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நாட்வா கிராமத்தில் உள்ள அனந்த் சிங் மூதாதையர் வீட்டில்  துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாட்னா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏகே-47 ரக இயந்திர துப்பாக்கி மற்றும்  வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே, தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு உள்ளூர் எம்.பி. மற்றும் அமைச்சரே காரணம் என்றும் அந்த வீட்டிற்குச் சென்றே பல ஆண்டுகள்  ஆகிவிட்டதாகவும் ஆனந்த்சிங் கூறியுள்ளார்.

Next Story