கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு


கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 9:10 AM GMT (Updated: 18 Aug 2019 9:27 AM GMT)

கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பலில் தனியார் கட்டிடத்தில் அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு  கடந்த 15-ம் தேதி சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. கொண்டாட்டம் முடிந்த பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும் பணியை இன்று இரு மாணவர்கள் மேற்கொண்டனர். விடுதியின் முதல் தளத்தில் நின்று மாணவர்கள் கொடிக்கம்பத்தை நீக்கிய போது, கொடிக்கம்பம் திடீரென அருகில் இருந்த மின்சாரக் கம்பியின் மீது மோதியுள்ளது. இதனால் இரு மாணவர்களையும் மின்சாரம் தாக்கியது. 

அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மூன்று மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். அவர்களும் விபத்தில் சிக்கிக்கொண்டனர். மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 5 மாணவர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் 5 பேரும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்த மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. மாணவர்கள் எவ்வாறு மின்சாரம் தாக்கி இறந்தார்கள் என்பது குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.  கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story