தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு
கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால் வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி உள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.
நேற்று இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாபில் கனமழை பெய்தது. இதில் 28 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் காணாமல் போயுள்ளனர். அதே நேரத்தில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் யமுனா மற்றும் பிற நதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இரண்டு நேபாளிகள் உள்பட 22 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். சிம்லாவில் ஒன்பது பேரும், சோலனில் ஐந்து பேரும், குலு, சிர்மவுர், மற்றும் சம்பா ஆகிய இடங்களில் தலா இரண்டு பேரும், உனா மற்றும் லஹால்-ஸ்பிட்டி மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.
பலத்த மழை காரணமாக சிம்லா மற்றும் குலுவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளில் வெள்ளம் அதிகரித்து வருவதால் இமாச்சல பிரதேசத்தில் பண்டோ மற்றும் நாத்பா ஜாக்ரி அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சிம்லா மற்றும் கல்கா இடையேயான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் கனமழை வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில், பலத்த மழையால் எட்டு பேர் இறந்து உள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இந்த மாநிலத்தில், சார்தாம் யாத்திரை எனப்படும், நான்கு புனித கோவில்களுக்கு செல்லும் வழித்தடத்தில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், யாத்திரை தடைப்பட்டுள்ளது.
ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை, கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த வழித்தடங்களில் தடை ஏற்பட்டுள்ளது. கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அரியானா- டெல்லி
யமுனை ஆற்றில் இன்று வெள்ளம் அபாய அளவைத் தாண்டியது. அரியானாவின் ஹதினி குந்த் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8.28 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருப்பதாலும், கனமழை பெய்வதாலும் யமுனை ஆற்றில் 204.7 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர்மட்டம் நாளை 207 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை வெள்ளம் அதிகரிக்க தொடங்கியபோதே கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இன்று வெள்ளம் அபாய அளவைத் தாண்டியிருப்பதால், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
மகாராஷ்டிராவின் புனேவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கங்கை, யமுனா, கக்ரா நதிகளில் அண்டை மாநிலங்களில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. படான், கர்முக்தேஷ்வர், நாரவுரா மற்றும் பாருகாபாத் ஆகிய இடங்களில் கங்கை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது என்று மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதேபோல், பாலியா கலானில் உள்ள ஷார்தாவிலும், உ.பி.யின் பராபங்கியில் உள்ள எல்ஜின் பிரிட்ஜில் உள்ள கக்ரா நதியிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.
Related Tags :
Next Story